Saturday, June 18, 2011

தூக்கம் கலைத்த திரைப்படம்!

வழக்கம்போல் நேற்றிரவு சேனல்களில் மேய்ந்து கொண்டிருந்தபோது சூர்யா டி.வி-யில் மம்முட்டியும் அவரது நண்பரும் தண்ணியடித்துக் கொண்டிருந்தார்கள். ஏனோ தெரியவில்லை தன்னிச்சையாக அடுத்த சேனலுக்கும் தாவ உதவும் விரலின் இயக்கம் சன்று தடைபட்டது. அதற்கு காரணம் மம்முட்டியின் கெட்டப்பா அல்லது அப்போது ஒலித்த கதை சொல்லியின் குரலா எனத் தெரியவில்லை. இருவரும் ஓலையால் வேயப்பட்டு மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்த ஒரு சிறு தடுப்பில் அமர்ந்து தண்ணியடித்தபடி பேசிக்கொண்டிருக்க பின்னால் குரல் ஒலிக்கிறது. திரையில், வீட்டின் முற்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சடலத்தின் அருகில் ஒரு சிலரே கூடி நிற்க மம்முட்டி கையில் வைத்திருக்கும் கிடாரை இசைத்தபடி போதையில் குளறியபடி கர்ண கொடூர குரலில் பாட ஆரம்பிக்கிறார். அருகில் இருக்கும் - சடலத்திற்கு அவர் மகனாக இருக்கலாம்- ஒருவர் மம்முட்டியை ஒரு மாதிரியாக பார்க்கிறார். இரண்டாவது வரி பாட யத்தனிக்கும் போது மம்முட்டியை அவர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிளுகிறார். வெளியே தள்ளப்பட்ட மம்முட்டி திரும்பித் திரும்பி பார்த்தபடியே நடக்க கதை சொல்லியில் குரல் ஒலிக்கிறது. எனக்கு லேசாக கண்ணைச் சுழட்டிய தூக்கம் கலைந்து திசை மாறிப் படுத்து பார்க்க ஆரம்பித்தேன்.

அடுத்த காட்சியில் அவரும் அவரது நண்பரும் மீண்டும் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறார்கள். குரல் கதையை நகர்த்திச் செல்கிறது. அடுத்த காட்சி தென்னை மரம் ஒன்றில் REPAIR HOME என எழுதப்பட்ட பலகை தொங்கிக் கொண்டிருக்க மம்முட்டி ஒரு பழைய சைக்கிளை தட்டி சரி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவரது நண்பர் பெயர் பலகையை பார்த்து விட்டு படிக்க முயற்சித்து மலையாளத்தில் எழுத வேண்டியது தானே எனக் கூற, மம்முட்டி ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு அதுவும் கீழே எழுதியுள்ளது எனக் கூற அதைப் படிக்கவும் அவர் படும் சிரமம் அருமை!

அப்போது அவருக்கும் அவரது நண்பருக்கும் நடக்கும் சம்பாஷணைகளின் பின்னணியில் மீண்டும் கதை சொல்லியின் குரல் ஒலிக்க மம்முட்டி தனது கிடாருடன் ஒரு பாதிரியாரைப் போய் பார்க்கிறார். அவர் அவரிடமிருந்து கிடாரை வாங்கிக் கொண்டு சாக்ஸ்போன் ஒன்றைக் கொடுத்து, இதைக் கற்றுக் கொண்டு பெரிய சங்கீதக்காரனகாக நீ வரவேண்டும் என்கிறார். உடனே அதை ஏற்றுக் கொண்டு செயலில் இறங்கும் மம்முட்டிக்கு திருமண நிகழ்ச்சிகளில் வாசிக்க மட்டுமே வாய்ப்புகள் அமைகிறது. அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியில் வாசித்துக் கொண்டிருக்கும் போது மணப் பெண்ணின் தோழிக்கும் மம்முட்டிக்கும் பிரேமம் உண்டாகி விடுகிறது. இப்போது கதை சொல்லியின் குரல் பின்னால் ஒலிக்க மணமேடையில் மணமக்களுக்கு இடது புறத்தில் நின்று வாசித்துக் கொண்டிருந்த மம்முட்டி வாசிப்பை நிறுத்திவிட்டு காட்சி மாறாமல் அப்படியே நிற்க மணமக்களின் இடது புறத்திற்கு வந்து வாசிக்க ஆரம்பிக்க கேமரா சற்று முன்னோக்கி வர மணப்பெண்ணாக, சென்ற காட்சியில் மம்முட்டியின் வாசிப்பிற்கு மயங்கி காதலில் விழுந்த அந்தப் பெண் நிற்கிறாள் வேறொருவனின் மனைவியாக!

இப்படியாக சிறிது காமெடியும் கண்கலங்கல்களுமாக நகரும் டேனி என்ற அந்தக் கதாப்பாத்திரத்தின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. 1930-ல் பிறந்து 2000-ம் ஆண்டுவரை வாழ்ந்த டேனி தாம்ப்ஸன் எனும் மனிதனின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது அந்தப்படம். பின்புலத்தில் அந்தந்த காலகட்ட அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பது இப்படத்தின் – இயக்குநரின் தனிச் சிறப்பு. சில படங்கள் பார்க்கும் முதல் பிரேமிலேயே மொழிபேதங்களைத் தாண்டி உங்களைக் கட்டிபோட்டுவிடும் தன்மையைக் கொண்டிருக்கும். இப்படம் அவ்வகையைச் சார்ந்தது. பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் அப்படித்தான் – ஒரு காலத்தில்! இப்போது தமிழக தொழில்நுட்பமும் ஆந்திர கதையம்சமும் தான் அங்கு ஆட்டிப்படைக்கிறது.

பாடல்கள் சண்டைக் காட்சிகள் இன்றி தொடர்ந்து இரண்டு மணிநேரத்தை சர சரவென நகர்த்திச் செல்லும் கதையும் திரைக்கதையும் அதற்கேற்ற நடிகர்களுமாக ‘டேனி’ என்ற இத்திரைப்படம் நான் சில வருடங்களுக்குப் பின் இறுதிவரை பார்த்த திரைப்படம்! மம்முட்டியை தவிர எந்த நடிக-நடிகையர் பெயரும் எனக்குத் தெரியவில்லை. நான் பார்க்கும் போது முதலில் கொஞ்சம் படம் ஓடிவிட்டது. இறுதியில் A Film By T.V. Chandran என டைட்டில் கார்டு போட்டார்கள். டி.வி.யை அனைத்து விட்டு படுக்கையில் விழுந்து வெகு நேரமாகியும் உறக்கம் வரவில்லை!

Saturday, June 11, 2011

இறப்பதற்கு 1000 வழிகள்!

சமீப காலமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன. தமிழ் தொலைக்காட்சிகள் (வித்தியாசம் என்ற பெயரில்) என்னென்னவோ நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதற்கு சத்யராஜ், பிரகாஷ்ராஜ் எல்லாம் வந்துவிட்டார்கள் (அவர்கள் கூறும் வித்தியாசங்களில் இதுவும் ஒன்று!). இந்த நிகழ்ச்சிகளில் 99.9 சதவீதம் வெளிநாட்டுச் சேனல்களில் இருந்து சுடப்பட்டவை என்பது வேறுகதை!

என்னதான் ‘சுட்டுப்’ போட்டாலும் அவர்களின் நேர்த்தியோ நம்பகத்தன்மையோ நம் தயாரிப்புகளில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம். சரி, விஷயத்திற்கு வருவோம்! கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளை FOX CRIME எனும் சேனல் ஒளிபரப்பி வருகிறது. இதில் சமீபமாக இரவு 10 மணிக்கு 1000 WAYS TO DIE எனும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இதில் மனிதனுக்கு எப்படியெல்லாம் மரணம் சம்பவிக்கிறது என்பதை காட்டுகிறார்கள். உதரணத்திற்கு சில...

ஒரு பார்சல் குடோனை கடந்து செல்லும் இளைஞன் ஒருவன் திறந்து கிடக்கும் காம்பவுண்ட் கேட்டை பார்க்கிறான். காம்பவுண்டிற்குள் சற்று தள்ளி எல்.சி.டி. டி.வி-க்கள் கொண்ட அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கே ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால் மெதுவாக உள்ளே நுழையும் அவன் ஒரு எல்.சி.டி. டி.வி பெட்டியை எடுக்கிறான். அப்போது திடீரென அங்கு வரும் காவலாளி அவனைப் பார்த்து சத்தம் போடுகிறான். உடனே எங்கிருந்தோ மற்றொரு காவலாளியும் வந்து விடுகிறான். யாருமே இல்லையென நினைத்த இடத்தில் திடீரென இரண்டு பேர் உதயமானதைக் கண்டு திகைக்கும் அந்த இளைஞன் எக்காரணம் கொண்டும் அவர்கள் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்ற வெறியில் அந்த வளாகத்திற்குள்ளேயே தலைதெறிக்க ஓடுகிறான். அதன் மற்றொரு பகுதிக்கு வந்த அவன் காவலாளிகளின் பார்வையில் படாமல் இருக்க அங்கிருக்கும் குப்பை தொட்டிக்குள் ஏறி ஒளிந்து கொள்கிறான். சில நிமிடங்கள் காத்திருக்கும் நேரத்தில் குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரி வந்து தனது இரும்புக் கரங்களால் அந்தக் குப்பைத் தொட்டியை தூக்கி தனது முதுகில் உள்ள தொட்டியில் கொட்டிக் கொள்கிறது. இயந்திரத்தின் சத்தத்தில் அவன் அலறல் யாருக்கும் கேட்பதில்லை. உள்ளே குப்பைகளுடன் குப்பையாக விழுந்த அவன் சுதாரிப்பதற்குள் குப்பைகளை அழுத்தி சக்கையாக்கும் அடுத்த இயந்திரம் இயங்க ஆரம்பித்து விடுகிறது. அது அவனை அப்படியே நசுக்க ஆரம்பிக்கிறது.

இப்போது அந்த நிகழ்வை அப்படியே முப்பரிமாண நிலையில் காண்பிக்கிறார்கள். அது சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட் ஒருவரும் திரையில் தோன்றி முதலில் உடம்பில் எந்த பாகம் உடையும் அதன் பிறகு என்னென்ன நடக்கும் என்பதை விவரிக்கிறார். பின் நிஜமாகவே அந்த இயந்திரத்திற்குள் மாட்டியவன் நசுக்கப்படுவதைக் காண்பிக்கிறார்கள்.

இதில் மிகவும் சுவாரசியம் என்னவென்றால், இதுபோல் ஒரு நிகழ்வு ஏற்படும்போது நிச்சயமாக அதைப் படமாக்க முடியாது என்பதுதான். ஏனென்றால் அவை எல்லாமே திடீரென எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகளாகவே இருப்பதும், அவை படமாக்கப்பட்டிருக்கும் விதம் உங்களுக்கு எவ்விதக் கேள்விகளை எழுப்பாது என்பதும்தான் இதில் சுவாரசியத்திலும் சுவாரசியம்!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

Friday, June 10, 2011

மீண்டும் வணக்கம்!

நான் முன்பே குறிப்பிட்டது போல் சோம்பல் மற்றும் பல்வேறு வேலைப்பளு காரணமாக எதுவும் எழுதவில்லை. தற்போது கூட எழுத வந்திருப்பது ஒரு மன அழுத்தம் காரணமாகத் தான். மன அழுத்தம் என்றால் வேறு ஏதோ பிரச்னை என நினைத்து விட வேண்டாம். நாம் அனுபவிக்கும் சில விஷயங்கள் எவ்வளவு தான் நாம் முயன்றாலும் நம் மனதை விட்டு நீங்கதவைகளாகிவிடும். அது போல் தான் அடுத்து நான் எழுதப் போகும் விஷயங்களும். இந்தப் பீடிகையை கண்டு ஏதோ இது உலகை மாற்றவல்ல உன்னதம் என நினைத்து விடாதீர்கள். வழக்கம் போல் மிகச் சாதாரணமானது தான். இந்த நீட்டி-முழக்கலுக்கு காரணம் நீண்ட நாட்களுக்குப் பின் எழுத வந்திருப்பது மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. இனி இடுகை...