Monday, December 8, 2014

ஏன்?

நேற்று இரவு 11 மணி, Zee Studio - வில் MONSTERS Vs ALIENS என்ற 3D அனிமேஷன்  படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிசயமாக என் மனைவியும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் கிளைமாக்ஸில் லயித்திருந்தபோது,  என் மனைவி திடீரென,  'ஏங்க  லிங்கா ஓடீருமா?'  என்றார் கொட்டாவி விட்டபடியே. நான்,  'ம்' என்றேன். அவரே மீண்டும், 'கே.எஸ்.ரவிக்குமார் படம் ஓடிரும்'  எனக் கூறி சமாதானப்படுத்திக் கொண்டார். அவர் ஏன் திடீரென அப்படி கேட்டார் என்பது எனக்கும் தெரியவில்லை !.

Monday, September 22, 2014

'ஐ' யகோ !

சமீபத்தில் நடைபெற்ற  ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஒரு சினிமாவை திட்டமிட்டு உருவாக்குபவர்களுக்கு இதுபோன்ற விழாவை சரியாக நடத்த முடியாமல் போனது சற்று ஆச்சரியம்தான்.
சமீபமாக இதுபோன்ற பாடல் வெளியீட்டு விழா என்றில்லாமல் பொதுவாக சினிமா விழா என்றாலே அதில் திரைக்கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்தி விடுகிறார்கள்.
விழாவில், திரைக்குப் பின்னால் உழைத்த கலைஞர்களை மேடையிலோ அல்லது மேடைக்கு முன்பாகவோ அமரவைத்து, அவர்களது திறமையை, உழைப்பை பாராட்டி பேசுவதைவிட வேறெதுவும் இதுபோன்ற விழாக்களில் சிறப்பாக இருக்காது.
இதுபோன்ற ஆடல், பாடல் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தான். அது அவர்களுக்கு உபயோகமாக இருந்தது.
திரைத்துறையினர் இதுபோன்ற விழாக்களுக்கு செலவிடும் தொகையை அந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாம். ஐ படப் பாடல் வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் அங்கு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிதான் என்பதில் துளியும் ஐயமில்லை.
சினிமாவில் ஆடி, பாடி நடிப்பவர்களை சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆடி, பாடச் சொல்ல வேண்டுமா?