Friday, January 23, 2015

இவர்தான் கடமை வீரன் !

சென்ற இடுகையின் துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல, மற்றொரு நாள் அதே நேரம், அதே பேருந்தில் ஏறினேன். ஓட்டுநரும், நடத்துநரும் நேறு நபர்கள். பேருந்து அவினாசிக்கு அருகில் உள்ள ஆட்டையாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஆக்ஸிலேட்டர் ராடு கழன்றுவிட்டது. மேற்கொண்டு பேருந்தை இயக்க முடியாததால் ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டிவிட்டார்.
இறங்கிச் சென்று முயற்சித்ததில் ராடை இன்ஜினில் இணைக்க முடியவில்லை. சட்டென்று மீண்டும் பேருந்தில் ஏறிய ஓட்டுநர் இன்ஜின் பானெட்டைத் திறந்து விட்டு விட்டு, சுமார் 2 அடி நீளமுள்ள இரும்புக் கம்பியால் இன்ஜினின் கீழ் பகுதியில், சற்றே வெளியே நீட்டியபடி இருந்த ஆக்ஸிலேட்டர் ராடின் ஸ்பிரிங் பொருத்தப்பட்டிருந்த இடைவெளியில் வைத்து பின்பக்கமாகத் தள்ளினார். இப்போது பேருந்து நகர ஆரம்பி்த்தது. இடதுகையால் இரும்புக் கம்பியைத் தள்ளிப் பிடித்தபடியே மற்றொரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். ஆனால் கியர் மாற்றும்போது இரும்புக் கம்பியை ஆக்ஸிலேட்டர் ராடில் இருந்து எடுத்துவிட்டு அதை மீண்டும் சரியாகப் பொருத்தி பேருந்தை இயக்குவது என்பது சாத்தியமே இல்லாத காரியமாகும்.
அதன்பின் அந்தக் கம்பியை நான் வாங்கிப் பொருத்திக் கொடுத்தேன். ஆனால் ஒவ்வொரு முறை கியர் மாற்றும் போதும் அருகில் இருப்பவர்கள் அதைப் பொருத்திக் கொடுத்தாலும் ஒரு கையால் கம்பியால் பேருந்தை இயக்கிக் கொண்டு, ஸ்டியரிங்கையும் கையாள்வது என்பது நடக்காத காரியம்.
ஆனால் வேறு ஒருவர் அந்த இரும்புக் கம்பியை பிடித்து ஆக்ஸிலேட்டர் ராடை இழுத்தால் பேருந்து ஓடும். நடத்துநருக்கோ,  அதைத் தான் செய்தால் என்ன? என்று தோன்றவில்லை.
அருகில் இருந்த நான் அந்த ராடை வாங்கி ஆக்ஸிலேட்டர் ராடைத் தள்ளிப்பிடித்தேன். அவினாசி பேருந்து நிலையம் சென்ற பின், "யாராவது இப்பிடியே கம்பிய இழுத்துப் புடிச்சா போயிரலாம்" என்றார். நான் "சரி" என்றேன் அவினாசியில் இருந்து சிறிது தூரம் சென்றதும் எனக்கு கை வலிக்க ஆரம்பித்தது. அந்த இரும்புக் கம்பியின்மேல் ஒரு துணியைச் சுற்றிக் கொண்டு மீண்டும் இழுக்க ஆரம்பித்தேன். மீண்டும் நான் கை வலி காரணமாக என் இடது கையை மாற்றியபோது, ஓட்டுநர், நடத்துநரை நோக்கி, "ஏய்யா பாத்துகிட்டே வர,  நீ கொஞ்சம் நேரம் வாங்கி இழுத்துப் புடிக்க மாட்டியா?" என்றார்.
அதன்பின், நடத்துநர் கொஞ்சம் நேரம், நான் கொஞ்சம் நேரம் என்று மாறி, மாறி இழுத்துப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்தோம். இதற்கிடையில், தூக்கி விடப்பட்ட இன்ஜின் பானெட், பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் மோதிக் கொண்டே வந்தது.  அதனால் கண்ணாடிக்கு ஆபத்து வந்து விடும் நிலை வர, ஓட்டுநரோ மற்றொரு கையால் பானெட் கண்ணாடியில்  மோதாதவாறு இழுத்துப்பிடித்தபடியே வந்தார்.
இப்படியே ஒரு வழியாக ஈரோடு (50 கி.மீ) வந்து சேர்ந்தோம். இதற்கு மேல் நான் "விம் பார்" போட்டு எதையும் விளக்க வேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன். வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இதற்கு முன் உள்ள இடுகையைப் படித்துக் கொள்ளுங்கள்.

Tuesday, January 13, 2015

"கடமை வீரன்"

பணி முடிந்து இரவு 12 மணிக்கு வீட்டிற்குச் செல்ல கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு பேருந்தில் புறப்பட்டேன். நள்ளிரவு நேரம், பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே,  ஓட்டுநர் பேருந்தை ரசித்து ஓட்டினார். அதனால், அவிநாசியை சுமார் 1 மணியளவில் கடக்க வேண்டிய பேருந்து 1.25 மணிக்கே கடந்து சென்றது.
ஒருவழியாக பெருமாநல்லூரைக் கடந்து செங்கப்பள்ளிக்கு சுமார் 2 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் உள்பகுதியில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைந்து விட்டன.
ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு விளக்குகளை எரியவைக்கும் முயற்சியில் இறங்கினார்.  ஆனால்  முடியவில்லை.  உடனே நடத்துநரிடம், 'ஏம்பா, செங்கப்பள்ளில பின்னாடி வர்ற வண்டிக்கு மாத்திவுட்டுருவமா?' என்றார். நடத்துனரோ, 'மாத்தறதுனாலும், மாத்தலாம். இல்ல அப்டியே போறதுன்னாலும் போலாம். எறங்கறது ஒன்னும் இல்ல. எல்லாமே ஈரோடு சீட்தான்' என்றார். 'இல்ல அது சரிவராது' என்றபடியே பேருந்தை செங்கப்பள்ளியைத் தாண்டி ஓட்டிச் செல்வதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
செங்கப்பள்ளி வந்தவுடன், 'ஹெட் லைட்தான் எரியுதில்ல, அப்டியே போயிரலாமா?' என்ற நடத்துநரின் யோசனையைப் புறந்தள்ளிவிட்டு பேருந்தை நிறுத்தியவுடன் பேக்கரிக்குள் புகுந்துவிட்டார்.
நடத்துநரும் அவருக்குத் துணையாகச் செல்ல பேருந்தில் இருந்த பயணிகளும், 'இந்த பஸ்சுல போறதுக்கு, பின்னாடி வர்ற வண்டில போனாக்கூட சீக்கிரம் போயிரலாம் போல இருக்குது' என்ற  முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
எங்கள் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தங்களது "கடமையை" முடித்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வருதற்கும், கோவையில் இருந்து எங்கள் பேருந்துக்கு பின்னால் அரை மணிநேரம்  கழித்து புறப்பட்ட பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.
நடத்துநரின் உத்தரவுக்கு காத்திராமல் அனைவரும் அந்தப் பேருந்துக்குத் தாவி, தப்பித்து வந்தோம்.
உள்பக்க விளக்குகள் எரியாததற்காக இயக்காமல் நிறுத்தப்பட்ட பேருந்தை காலையில் வெளிச்சம் வந்த பிறகுதான் ஓட்டிச் சென்று சேர்த்தார்களோ என்னவோ?
இந்த வழித்தடத்தில் இதுபோன்ற "கடமை வீரர்கள்" இன்னும் சிலர் இருக்கிறார்கள். உங்களுக்கும் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் அனைவருக்கும் ஒரு பாராட்டு விழா நடத்திவிடலாம்!